Wednesday, 20 October 2021

ஓம் கசவன மௌன ஜோதி

 ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ!       


அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வணக்கங்கள்.

பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.


திண்டுக்கல் பழனி நெடும் சாலையில் உள்ளதே கசவனம்பட்டி என்ற கிராமம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள அந்த ஊர் அமைதியானது


ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர் . அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது.



அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம். எந்த உடையுமே அணியாமல் பிறந்த மேனியாகவே திரிந்தார். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப் போல பிரும்மனின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம்


பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார். பாம்புகளுடன் விளையாடுவாராம். திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம். அவர் அப்படி செய்தால் எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பதைக் காணலாமாம். அவர் எவருடனும் பேசியது இல்லை. ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர்


சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று வணங்கினார்கள். பல ஞானிகள் மற்றும் மகான்கள் கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம்







ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும் வந்த ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர். ஆகவே அவர் எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.





ஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம் . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை


காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்கும். அவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால் புகை பிடிப்பார். அதற்குக் காரணம் ஒரு சிகரட்டை புகைக்கும்போதே அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது துயரங்கள் அவரிடம் சென்று விடும் . அவர் மொழி மௌனம்


அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார்


அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார். அடுத்தகணம் அவர்களின் வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர்.


எவர் ஒருவர் சித்தர்களை பற்றி நினைக்கின்றார்களோ அவர்களின் எண்ணம் செயல் அனைத்தும் சித்தர்களுக்கு தெரிந்து விடும். அதன் பிரதிபலிப்பாக பல அருள் நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.இப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல் 1982 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார்


ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற அன்று பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.


ஐப்பசி பௌர்ணமி அன்னக்காப்பு அலங்காரத்தில் பகவான். 

இன்று புதன் கிழமை 20.10.2021  பிற்பகல் 12.30 மணிக்கு கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி பூஜை அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் நடைபெறும்
























----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவைப் படித்ததற்கு நன்றி!💐💐💐



Visit the blog:
https://guruarull.blogspot.com/



Thanks for 
https://tut-temples.blogspot.com/










No comments:

Post a Comment